zaterdag 28 januari 2012

வதைமுகாமில் நான் -பி.இரயாகரன்


எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)

எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)


  • PDF
குறிப்பு : நான் 06.05.1987 மாலை 7 மணி வரையான காலத்தில், பின்வரும் விடையங்களை படிப்படியாக இரண்டாம் திகதி தொடங்கி ஏற்றேன். அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ஏதோ விதத்தில் என்னுடன் சம்பந்தப்பட்டவை என்பதை ஏற்றேன். அவை மக்கள் குரல், தீக்கதிர், எஸ்.எம்.ஜீ (S.M.G) வாங்கியது, 80000 ரூபாவை கொடுத்த இரண்டு ஏகே-47 வாங்க பணம் கொடுத்தது. ஆயுத புத்தகம், றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், பணம் என்பனவற்றை வசந்தனிடம் கொடுத்தாக ஏற்றேன். இதன் பின்னால் நான் அவிழ்க்கப்பட்டேன். இவை பல்வேறு தொடர்ச்சியான முரண்பட்ட அவர்களின் கேள்விகள் ஊடாக ஒத்துக்கொண்ட நான், கடைசிவரையும் ஆயுதப் புத்தகம் கொடுத்தை ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியாக அவர்கள் அடிக்கடி மாறி மாறி குறிப்பெடுக்கும் போது, சுரேஸ் என்பவர் எனது ஆயுதப் புத்தகம் மேல் பேப்பர் வைத்து குறிப்பு எடுத்ததை அவதானித்த நான், அதையும் ஒப்புக் கொண்டதன் மூலம், வசந்தனிடம் நான் கொடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டவை முடிவுக்கு வந்தது.

விளக்கம் : என்ன கொடுத்தேன் என்பதை நானாக ஒத்துக்கொள்வதே, என் பற்றிய அவர்களின் உயர்ந்தபட்ச  அளவுகோலாக இருந்தது. வசந்தன் என்னிடம் இருந்து எதை பெற்றாரோ, அதை அவர் முழுமையாக ஒத்துக்கொண்டதை, அவர்களின் கேள்விகளின் முரண்பாடுகள் எடுத்துக் காட்டியது. இது கொடுத்தாயா அது கொடுத்தாயா என்ற முரண்பட்ட நபர்களின் கேள்விகள், எனக்கு முழுமையாக அதை அம்பலம் செய்தது. கீழ்மட்ட உறுப்பினர்கள் அடிக்கடி என்னிடம் சொன்னவற்றை மீள் குறிப்பு எடுக்க தொடங்கினர். சுரேஸ் என்பவர் இது கொடுத்தாயா அது கொடுத்தாயா என்று பொருட்களை குறித்துக் கேட்டார். அவரே இறுதியாக நான் வசந்தனிடம் கொடுத்த பல ஆயதம் சார்ந்த நூலில் ஒரு நூலைக் கொண்டு வந்து, அதன் மேல் பேப்பர் வைத்தே குறிப்பை எடுத்தார். தொடர்ச்சியாக மீள மீள கேட்டு எழுதிய போது, கீழ்மட்ட உறுப்பினர்கள் கேள்விகளைக் கேட்டனர். நான் கொடுத்ததையும் கொடுக்காததையும் கலந்து கேள்வியாக முன்வைத்தனர். இதில் இருந்து 2,3,4,5,6 ம் திகதி வரையிலான காலத்தில, இவை பற்றி படிப்படியாக கேள்வியின் உள்ளடகத்தின் சாராம்சத்தில் இருந்து, இவற்றை ஒப்புக் கொண்டேன். கேள்வியின் முரண், கேள்வியில் பொருட்கள் பற்றிய தரவுகள், பொருட்கள் பற்றிய மீள் கேள்விகள் அனைத்திலும் இருந்து, திட்டவட்டமான தரவுகளை என்னால் தொகுக்க முடிந்தது. இதில் இருந்தே அவற்றை நான் கொடுத்ததாக ஒப்புக் கொண்டேன். வசந்தன் சம்பந்தப்படாத எந்த தகவல்களையும், பொருட்களையும் இறுதி வரை என் மூலம் பெறமுடியவில்லை. வசந்தனுக்கும் எனக்குமான அனைத்து உறவு தொடர்பான, முழுமையான தரவுகள் எனக்கு தெரிந்து இருந்தது. அவர் என்ன சொன்னார் என்பதை தெரிந்து கொள்வதற்காக, தொடர் சித்திரவதைகளை தாங்கிக் கொண்டேன். 18ம் திகதி கைதான ஒரு நபரில் இருந்து, 28ம் திகதி நான் கடத்தப்பட முன்பாக ஐந்து நபர்கள் மீதான தொடர் விசாரணை மற்றும் கைதுகள் மூலம் தகவல்களை புலிகள் சேகரித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியில் நான் கடத்தப்பட்டேன். அவர்கள் 26ம் திகதி அளவில் எனக்கு முன் கைதான வசந்தனிடம், முழுமையாகவே என் தொடர்பு முழுவதையும் சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட 9 நாளில் 5 நபர்கள் மீதான விசாரணை முடிவுற்றது. இதில் நான் அறிய வசந்தன், அதியன் (பாரிஸ்சில் உள்ளார்), குருபரன் (தற்போது பத்திரிகை துறையில் உள்ளார்) போன்றவர்கள் கைதாகினார்கள்.
இந்த விசாரணையில் இதன் பின்பு, எந்த நபரும் இதன் பின் என் சார்ந்து கைதாகவில்லை. இந்த விசாரணைக் காலத்தில் எனக்கு உணவு தரப்படவில்லை. என் மீது ஊற்றும் நீரில் இருந்து ஒரு சில துளி நீரை நக்கிக் கொண்டேன். எனது நித்திரை முற்றாக குழப்பியடிக்கப்பட்ட நிலையில், தொங்கியபடியே விடப்பட்டு இருந்தேன். எனது கை வீங்கி வெம்பிக் கிடந்தது. வீங்கிய கை கட்டப்பட்ட நிலையில், கயிறு இரத்த ஒட்டத்தை தடுத்தது. விரல்கள் மேலான தாக்குதலால் கை வீங்கிவிட, கட்டிய இடம் இறுகிப் போனதால் இரத்தம் இன்றி கை மஞ்சள் நிறம் கொண்டதாக மாறியது. இறுதியாக ஆயுத தரவுகளைக் கொண்ட நூல் கொடுத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, என்னை அவிழ்த்து விட்டனர்.
மக்கள்குரல், தீக்கதிர் என்ற இரு பத்திரிகைகள் அன்று மக்களின் அடிப்படையான பிரச்சனைகள் சார்ந்தும், மக்கள்விரோத நடத்தைகளை அம்பலம் செய்தும், இரகசியமாக ரோணியோ செய்யப்பட்ட நிலையில், தபால் வழியாகவும், பொது நூலகத்திலும் பரவலாக விநியோகமாகியது. இது மக்கள்விரோதப் புலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்தி, மக்களின் விடுதலைக்கு நேரடியாக குரல் கொடுத்தது. இதில் ஒன்றை தமிழ் மக்கள் தேசிய விடுதலை முன்னணி வெளியிட்டது. இதை நானே பொறுப்பு எடுத்து வெளியிட்டேன். மற்றையதை வசந்தனை உள்ளடக்கிய வகையில், முன்னாள் மாணவர் அமைப்பில் இருந்த சிலர் இணைந்து வெளியிட்டனர். இவற்றிற்கு நான் சில உதவிகளைச் செய்திருந்தேன். இதற்கு பயன்படுத்திய ரோணியோ மெசின் உட்பட, அதன் மூல ஆவணங்களையும் கூட புலிகள் வசந்தனிடம் இருந்து கைப்பற்றியதன் மூலம், இது முற்றாக நின்று போனது. இந்த இரு பத்திரிகையும் அன்று புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது. பொது வாசிகசாலையில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இதை விட முன்னேறிய அரசியல் சக்திகளுக்கு கிடைக்கும் வண்ணம் தபால் வழியாக அனுப்பப்பட்டது. சில வீடுகளுக்கு வீட்டு வாசலில் போடப்பட்டது.
நான் அன்று வசந்தனிடம் கொடுத்த பொருட்கள், தவிர்க்கமுடியாத நிலையினால் மிகக் குறுகிய காலத்தில் தற்காலிகமாக கொடுக்கப்பட்டதே. இலங்கை இராணுவம் முன்னேறிய ஒரு பிரதேசத்தில் இவை எனது பொறுப்பில் இருந்ததால், அவசரமாக இடம் மாற்ற வேண்டிய நிலையில் இது வசந்தனிடம் கொடுக்கப்பட்டது. ஒரு மாத  இடைவெளி கூட இல்லாத ஒரு நிலையில், இவை அனைத்தும் புலிகளின் கையில் போய் சேர்ந்தது துரதிஸ்டவசமானதே. குறிப்பான மாற்றங்கள் கனிய முன்பே, புலிகளின் கையில் இவை தற்செயலாகவே சிக்கி கொண்டது.
மிகவும் நெருக்கடியான அக்கால கட்டத்தில் தற்காப்பு இராணுவத் தாக்குதலை, புலிகளின் பாசிச அழித்தொழிப்புக்கு எதிராக நடத்துவது தொடர்பாக தளக்கமிட்டி முடிவு எடுத்தது. இதற்கான ஒரு இரகசிய கெரில்லாக் குழுவையும் பிரதேசரீதியாக ஒழுங்கமைத்திருந்தோம். அமைப்பின் மத்தியகுழுவின் சார்பாக இந்தியாவில் இருந்தோர், இதை கடுமையாக எதிர்த்தனர். தற்காப்பு தயாரிப்பை எதிர்த்த அவர்கள், அனைவரையும் இந்தியா வரக் கோரினர். மார்க்சியத்தை படிப்போம் என்றனர். இதை உறுதியாக மறுத்த நாம், மண்ணில் போராட, அமைப்பின் அனைத்துப் பிரிவையும் கோரினோம். அதேநேரம் இந்தியா சென்றவர்களை நாடு திரும்பக் கோரினோம். முக்கியமான மாற்றங்களை உள்ளடக்கிய வகையில், தலைமறைவு வாழ்வுமுறைக்கான அடித்தளத்தை இட்டோம். எதிர் தாக்குதல் நடத்துவது என்ற முடிவு, அமைப்பில் கடுமையான முரண்பாடுகளையும் மோதலையும் ஏற்படுத்தியது. இது தளம், இந்தியா என்று இரு வேறுபட்ட பிரதேசம் சார்ந்து அமைப்பை பிளவாக்கியது. இந்தியாவில் இருந்த அடிமட்ட உறுப்பினர்கள் அனைவரும் எமது நிலைக்கு ஆதரவாக நின்றதுடன், தளம் திரும்பும் போராட்டத்தை இந்தியத் தலைமைக்கு எதிராக நடத்தினர். தளக்கமிட்டி அனைவரையும் நாடு திரும்பக் கோரியது. இதை இந்தியாவில் இருந்த தலைமை மறுத்தபோது, அவர்களை அமைப்பை விட்டே வெளியேற்ற நான் கோரினேன். இப்படி மத்தியகுழுவின் பெரும்பான்மை அவர்களை உடனடியாக நாடு திரும்பக் கோரிய நிலையில், அவர்கள் திரும்பி வர மறுத்த நிலையில், அவர்களை அமைப்பை விட்டு வெளியேற்றக் கோரினேன். எனது கோரிக்கையை மற்றைய தளக்கமிட்டி உறுப்பினர்கள் உறுதியற்ற முறையில், முடிவெடுக்கத் தவறி ஊசலாடியதன் மூலம் அமைப்பு முற்றாகச் சிதைந்து போனது.
எதிர்த்துப் போராடி மடிவது அல்லது நிலைமையை மாற்றி ஒரு இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை எதிர்நீச்சல் இட்டபடி உருவாக்குவது என்ற நிலை மட்டுமே, அன்று பாசிசத்தில் எதிர் கொள்வதற்கு உரிய ஒரு மாற்றுப் பாதையாக இருந்தது. இதில் அமைப்பில் தலைமைக்கிடையிலான முரண்பாடும், அதைத் தொடர்ந்து தலைமை ஏற்றவர்களிடையே இருந்து முரண்பாடும், அதைத் தொடர்ந்து  நான் கைதானது நிலைமை இதை முற்றாக மாற்றியது. இதைத் தொடந்து தொடர்ச்சியான அதிரடியான மாற்றங்கள், இதை முற்றாக அமுல்படுத்த முன்பே தானாகவே அனைத்து கட்டமைப்பும் சிதறிப் போனது. தலைமையின் ஊசலாட்டமும் உறுதியற்ற தன்மையும், பாசிசத்தின் செங்கம்பளமாகியது. நான் பாசிச வதை முகாமில் இருந்து தப்பிய பின்பு, இதை மீள அமைக்க கடுமையாகப் போராடினேன். இந்தியா சென்று திரும்பிய நான், யாழ் மண்ணுக்கு மீளவும் சென்றேன்.
அமைப்பு எந்த முடிவும் எடுக்காது ஊசலாடியது. ஆனால் எமக்கு இருந்த மக்கள் தொடர்புகள், அமைப்பு உறுப்பினர் அடிப்படைகள் எதுவும் சிதைந்து விடவில்லை. ஆனால் உறுதியான அரசியல் நடவடிக்கை மட்டுமே, தொடர்ந்து எதிர்நீச்சலுக்கான அரசியல் பாதையாக இருந்தது. அமைப்புக்கு தலைமை தாங்கியவர்கள், இதை வழங்கத் தயாராக இருக்கவில்லை. எனது போராட்டத்தின் சாராம்சத்தை கொள்கைரீதியாக, தளத்தில் இருந்த மத்தியகுழு ஏற்ற போதும் அமுல்படுத்த முன்வரவில்லை. மத்தியகுழு எடுத்த முடிவுகளை உறுதியாக கடைப்பிடிக்கவும், அமைப்பின் பெரும்பான்மை முடிவை ஏற்கவும் மறுத்து எதிராக செயல்பட்டவர்களை அமைப்பில் இருந்து வெளியேற்றவும் அமைப்பு மறுத்தது. ஊசலாட்டமும், உறுதியற்ற நிலைமையும் தொடர்ந்ததால், நான் அமைப்பிடம் எனது இராஜினாமாவைக் கொடுத்தேன். இதன் மூலம் அமைப்பு முற்றாக மாற்றுப்பாதையின்றி, தொடர்ந்தும் சிதைந்து போனது. எனது இராஜினாமாவைத் தொடர்ந்து, அவசரமாக நாடு திரும்பிய மற்றைய மத்தியகுழு உறுப்பினர்கள் கொழும்பு வந்தனர். தொடர்ந்து அவர்களுடன் முரண்பட்ட மற்றைய தளக்கமிட்டி உறுப்பினர்களும், அமைப்பில் இருந்து இராஜினாமா செய்தனர். இந்தியாவில் இருந்து திரும்பிய ரமணியின் தனிப்பட்ட சில உதிரியான மீள்முயற்சியின் பின்பு, அமைப்பு முற்றாக சிதைந்து போனது. அவரை பின்னால் கடத்திச் சென்ற புலிகள், உயிருடன் அவர் எலும்புகளை ஒவ்வொன்றாக அடித்து முறித்தே கொன்றனர். அரசியல் செயலற்ற நிலையில் இருந்த பலரை, புலிகள் பின்னால் கடத்திச் சென்று உயிருடன் கொன்றனர். சிலரை வீதிகளில் அன்றாடம் சுட்டுக் கொன்றனர். இப்படி ஒரு படுகொலை மூலமே பாசிசம் கொலுவீற்றிருந்தது. இந்தப் பாசித்தின் பண்புளை சித்திரவதைகளுடான தொடர்ச்சியில் மேலும் பார்ப்போம்.


































Geen opmerkingen:

Een reactie posten